""இந்திய நாடாளுமன்ற குழுவின் இலங்கை நல்லெண்ண பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (ஃபிக்கி), அந்தப் பயணத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, ஃபிக்கி தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"ஹிந்து' நாளிதழில் வெளியான செய்தியில், "இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு ஏப்ரல் 8 முதல் 12-ம் தேதிவரை பயணம் செய்ய உள்ளதாகவும், அவர்கள் அந்த நாட்டுத் தலைவர்களுடன் அரசியல், வர்த்தம், தொழில் உறவுகள் தொடர்பாக பேச்சு நடத்துவர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.
இலங்கை அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதை மேலும் தீவிரமாக்கும் வகையில், இந்திய மீனவர்களை சிறைப்பிடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குரியாக்கும் செயலில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மா நாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில், இலங்கைக்கு இந்திய எம்.பி.க்கள் குழுவை நல்லெண்ண பயணமாக அனுப்பி வைக்கும் இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
dinamani. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக