உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணுகுண்டு சோதனை நடத்தியதால், ஐ.நா. புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிரான அறிவிப்புகளை வடகொரியா வெளியிட்டு வந்தது.இதன் உச்ச கட்டமாக தென்கொரியா மீது தற்போது போர் பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவை தாக்கும் வகையில் ஏவுகணைகளையும் வட கொரியா தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு மூடப்பட்ட யோங்பியோன் அணுசக்தி வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்று வட கொரியா நேற்று அறிவித்தது.
முன்னதாக, கொரியா தொழிலாளர்கள் கட்சிக் கூட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-யுன் பேசும்போது அணுசக்தி திறன் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுவது குறித்து விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வட கொரியாவை ஆயுத போட்டிகளில் ஈடுபட வைத்து நமது பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுத்த அமெரிக்கா நினைக்கிறது. உறுதியான அணு பலத்தை அடிப்படையாகக் கொண்டே அமைதியும் வளர்ச்சியும் அமைய முடியும். அப்போதுதான் மக்களிடம் மகிழ்ச்சி இருக்கும். எந்த அளவுக்கு அணு ஆயுதத் திறன் இருக்கிறதோ, அந்த அளவுக்கு மற்ற நாடுகளின் படையெடுப்புகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
நமது அணு ஆயுத பலம், போர்களை எதிர்க்கும் திறனுடன் இருக்கிறது. அது நமது இறையாண்மையை பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வட கொரியாவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
அணு ஆயுத அச்சுறுத்தல்கள் என்பது விளையாட்டல்ல. வட கொரியாவின் தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை இழந்து வெகு தூரம் சென்றுவிட்டது. இது மேலும் எல்லை மீறி செல்வதற்குள் அமைதி ஏற்பட வேண்டும். அணுஆயுத ஒப்பந்தத்தை மீறியதற்காக வட கொரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் எந்த நாட்டிற்கும் ஏற்படவில்லை என நான் கருதுகிறேன்.
எனினும், வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு மற்றவர்கள் பதிலடி கொடுத்து விட்டால் அதன் பின்னர் உருவாகக் கூடிய பின்விளைவை எண்ணி நான் கவலையும், அச்சமும் அடைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
newsonews thanks |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக