9 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற இரண்டு பேரை, பொதுமக்களே பிடித்து எரித்து கொன்ற சம்பவம் தேனி மாவட்டத்தையே உறைய வைத்திருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்றபதற்கு தினம் தினம் ஏதேனும் ஒரு சம்பவம் கொடூரமாய் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.
குறிப்பாக பலிவாங்குதலில் தென்தமிழகம் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என கொஞ்சம் வேகமாகவே பின்னோக்கி செல்கிறது எனச்சொல்லலாம். பொட்டு சுரேஷ் பலி தீர்க்கப்பட்டதில் பதறிக்கிடந்த தென்மாவட்டங்களில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டத்தில் 8 பேர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இரண்டு பேரை வீட்டிற்குள் பூட்டி வைத்து உயிரோடு எரித்த சம்பவம்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (30), கிருஷ்ணன் (39). ஆகிய இருவரும் சித்தப்பா, மகன் உறவுமுறை கொண்டவர்கள். இவர்கள் பருத்தி வீரன் பட பாணியில் குடித்துவிட்டு அடுத்தவர்களை வம்பு வாங்கி ரகளையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மணிகண்டனின் தம்பி கார்த்திக், அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் (பெயர் மாற்றம்), என்கிற பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, சம்பவத்தை கேள்விபட்ட ஊர்காரர்கள் கார்த்திக்கை போலீஸில் பிடித்து கொடுத்தனர்.
அதன்பிறகு மணிகண்டனும், கிருஷ்ணனும் ஆயுதங்களோட வந்து எவன்டா கார்த்திக்கை போலீஸ்ல பிடிச்சி கொடுத்ததுன்னு எல்லாரிடமும் பிரச்னை செய்ய, பாதுகாப்பில் இருந்த ஓடைப்பட்டி போலீஸார் மூன்று பேரையும் உள்ள தள்ளினார்கள். அந்த வழக்கிலிருந்து பதினைந்து நாளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தவர்கள் கேரளா மாநிலத்திலுள்ள மூணாறுக்கு போய் வேலை செய்து வந்தனர்.
9 பேருக்கு கத்திக்குத்து: மணிகண்டன், கிருஷ்ணன் இருவரும் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். 2 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்குள் வந்தனர். வந்த வேகத்தில் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிரே வந்த 3 பேரை திடீரென குத்தினர். இதனை பார்த்த பொதுமக்கள் 2 பேரையும் பிடிப்பதற்காக முயன்றபோது சரமாரியாக கத்தியால் தாக்கினர். இதில் மேலும் 6 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. 2 பெண்கள் உள்பட 9 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் ஓடிவந்து தாக்குதல் நடத்தவே நிலைகுலைந்த 2 பேரும் தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மணிகண்டனின் தங்கை முத்துவின் வீட்டுக்குள் சென்று இருவரும் மறைந்து கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த சிலர் அந்த வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர். பின்னர் வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் வைக்கோல்களை திணித்து, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். வீட்டுக்குள் மள,மளவென பற்றி எரிந்த தீயில் மணிகண்டன், கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் உயிருடன் கருகி அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கத்திக்குத்து காயம் அடைந்த 9 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர். தமிழகத்தில் முதல் முறையாக குற்றம் செய்தவர்களை பொதுமக்களே எரித்து கொன்ற இச்சம்பத்தால், பதற்றத்தில் உறைந்திருக்கிறது தேனி மாவட்டம்.
tamilcnn thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக