ராமநாதபுரம் அருகே இருதரப்பினர் நள்ளிரவில் மோதல் அதில் 14 பேர் மீது வழக்கு
கவாஸ்கர் அவர்களால் Monday 1st April 2013

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளத்தில் ஒரு சமுதாயத்தினர் தெரு முனை பிரசார கூட்டம் நடத்தினர். அப்போது மற்றொரு சமுதாயத்தை தரக் குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டம் முடிந்து இரவில் பிரசார குழுவினர் சென்றபோது, ஒரு பிரிவினர் அவர்களை வழிமறித்து தரக்குறைவு பேச்சு பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இது, இருதரப்பினர் இடையே மோதலாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தின்போது கற்களும் வீசப்பட்டன. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன், தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துச்செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள், கோஷ்டி மோதலை தடுக்க முயன்றனர். அப்போது கல்வீச்சில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச் செல்வம் காயம் அடைந்தார். இதேபோல ஒரு தரப்பைச் சேர்ந்த முகமது பஷீத் என்பவரும், மற்றொரு பிரிவில் உபயசெல்வம், முருகானந்தம் ஆகியோரும் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக முகமது பஷீத் கொடுத்த புகாரின்பேரில் 6 பேர் மீதும், பிரசாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் 8 பேர் மீதும் அழகன்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newsalai tkanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக