இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு என்கிறார் மருத்துவர்
. சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும். 30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது.
உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே
. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது.
கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.
மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை
உருவாகிறது.
தூக்கமின்மையை விரட்ட சில டிப்ஸ்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும். தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.
தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக்கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். இரவில் மது அருந்தும் பழக்கத்தை கைவிடவும். மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும்.
அடிக்கடி காபி குடிப்பதை நிறுத்தவும். பழங்களை அப்படியே சாப்பிடலாம். மசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். இரவு நேரத்தில் அரிசி மற்றும் ரவை, ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும். இரவில் தினமும் பால் சேர்க்கலாம்.
ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகிய ஐந்து பழங்களும் தூக்கத்துக்கு நல்லது. இவற்றை பழக்கலவை செய்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தூக்கம் பெறலாம். தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை கட்டாயம் இருக்க வேண்டும். முளைகட்டிய பயறு வகை ஒன்றும் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்காய்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
தூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்கவும். கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய உணவுகளை காலை நேரத்தில் உட்கொள்ளலாம்.
இத்துடன் ஏதாவது ஒரு காய் பொரியல் சேர்த்துக் கொள்ளும் போது நார்ச்சத்துடன் மற்ற வைட்டமின் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் தூக்கம் இன்மை பிரச்னையை விரட்டலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக