சென்னை புது வண்ணாரப்பேட்டை அம்மனியம்மன் கோவில் கார்டன் 8-வது தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் (வயது 41). தே.மு.தி.க. ஆர்.கே. நகர் பகுதி துணை செயலாளரான இவர் மீது 4 கொலை வழக்கு, 6 கொள்ளை வழக்கு உள்பட 14 வழக்குகள் உள்ளன.
கடந்த 1-ந் தேதி முதுகுவலி காரணமாக பிரகாஷ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று இரவு பிரகாசுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரியில் 1-வது டவர் கட்டிடத்தில் 3-வது மாடியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் (அறை எண் 134) படுத்து தூங்கினார்.
நள்ளிரவு 12.15 மணி அளவில் பிரகாஷ் சிகிச்சை பெற்ற வார்டில் 7 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் நைசாக புகுந்து கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரகாசை சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. வலி தாங்க முடியாமல் அவர் அலறித் துடித்தார். உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு வந்தனர். அதற்குள் 7 பேரும் தப்பி ஓடி விட்டனர். வார்டுக்குள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரகாசை காப்பாற்றுவதற்காக எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு ஆஸ்பத்திரியில் பார்வையாளர்களை சந்திப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். நோயாளிகள், பொதுமக்கள் என எப்போதுமே ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழியும். வெளியாட்கள் யாரும் வார்டுக்குள் எளிதாக நுழைந்துவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகளும் இருக்கும்.
இதையெல்லாம் மீறி நேற்று இரவு கொலையாளிகள் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மறைந்திருந்துள்ளனர். உயிர் பிழைப்பதற்காக ஆஸ்பத்திரியை தேடி வருகிறோம். இங்கேயே உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தால் எப்படி? என நோயாளிகள் சிலர் கேள்வி எழுப்பினர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக ஜோதிலிங்கம், நாகராஜ், குமார், சுரேஷ், மோகன், சண்முகம், அப்துல் கலாம் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒருவருடத்துக்கு முன்பு செங்குன்றத்தை சேர்ந்த வல்லுசேகர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளி பிரகாஷ். அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வல்லுசேகரின் மாமனார்தான் ஜோதி லிங்கம். அவர்தான் பிரகாசை பழிவாங்க தனது கூட்டாளிகளுடன் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கொலை வெறியை தீர்த்து உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரகாஷ்க்கு தங்க மலர் என்ற மனைவியும், டிப்ளமோ படித்து வரும் தினேஷ் என்ற மகனும், 4-ம் வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். பிரகாஷ் உறவினர்கள் இன்று காலை ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையம் முன்பு திரண்டு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர். ஆஸ்பத்திரியில் உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினர்.
பிரகாஷ் மாமியார் குமாரி கூறும்போது, உயிர் பிழைக்க ஆஸ்பத்திரிக்கு வந்தவர் உயிரை இழக்க வேண்டியதாகி விட்டது. ஆஸ்பத்திரி பாதுகாப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பிரகாசின் மகன் தினேஷ் நேற்று இரவு தந்தைக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் இருந்தார். கொலையை அவர் தடுக்க முயன்றார். ஆனால் கொலையாளிகள் அவரை தள்ளி விட்டு பிரகாசை சுற்றி வளைத்து வெட்டினார்கள்.
தன் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டதை கண்டு அவர் கதறி அழுதார். கண்ணீர் மல்க அவர் கூறும்போது, 11.30 மணிக்கு முகத்தை கர்ச்சிப்பால் மூடிக்கொண்டு 2 பேர் வார்டுக்குள் புகுந்து என் தந்தையை குத்தினர். எனது தந்தை கூச்சலிட்டபடியே வெளியே வார்டை விட்டு வந்தார். அப்போது அங்கு பதுங்கி நின்ற 5 பேர் எனது தந்தையை சுற்றி வளைத்து வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். சத்தம் போட்டும் உதவிக்கு யாரும் வரவில்லை என்றார்.
tamilcloud thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக