By dn, திருவொற்றியூர்
First Published : 26 December 2012
வளர்ந்து
வரும் நுகர்வோர் கலாசாரத்திலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற
எளிமையான வாழ்க்கைக்கு குழந்தைகளைத் தயார்படுத்தும் பணியில் பெற்றோர்கள்
ஈடுபட வேண்டும் என பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை
முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர்
நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில்
நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம் திருவொற்றியூரில் திங்கள்கிழமை
நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவொற்றியூர் பொதுவர்த்தக சங்க கெüரவத்
தலைவர் ஜி.வரதராஜன் தலைமை வகித்தார். மையத்தின் செயலாளர் என்.துரைராஜ்
வரவேற்புரையும், பொருளாளர் கு.சுப்பிரமணி நன்றியுரையும் ஆற்றினர்.
கூட்டத்தில் இறையன்பு
பேசியதாவது:
உலகம் முழுவதும் நுகர்வோர் கலாசாரம் அதிகரித்து
வருகிறது. தேவைக்கு அதிகமாக வாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து
வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு சைக்கிள்கள் வைத்திருந்தால்
அவர் பணக்காரர். ஒரு கிராமத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்.
நான்கு வேட்டி, சட்டைகள் வைத்திருந்தால் அவர் வசதியானவர்
என அர்த்தம். விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் அப்போது இல்லை.
ஆனால், இன்றைய நிலை என்ன? ஓட்டுநர் வேலைக்கு மட்டும் 2 லட்சம் பேர்
தேவைப்படுகிறார்கள். இதற்குக் காரணம் தொழில் புரட்சிதான்.
கடன்
அட்டை வேண்டாம்: முன்பு மூன்று அல்லது நான்குவகை சோப்புகள் இருந்த காலம்
போய் இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட சோப்பு வகைகள் வந்துவிட்டன.
நட்சத்திர விடுதிகளில் மட்டுமே கிடைத்து வந்த வட இந்திய உணவு வகைகள்
இப்போது வீதிதோறும் கிடைக்கின்றன.
தேவையை அதிகப்படுத்துவதும்,
அதனைக் குழந்தைகள் மூலம் புகுத்துவதும் விளம்பர உத்தியாக பன்னாட்டு
நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. பணம் இல்லாவிட்டாலும் வாங்கலாம் என்பதற்கு
கடன் அட்டைகள் வந்துவிட்டன. பணம் வைத்திருக்கும் ஒருவன்
ஆயிரம் ரூபாய்க்கு பொருள்களை வாங்குகிறான் என்றால் அவனே கடன் அட்டை
வைத்திருந்தால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு பொருள்களை வாங்கிக் குவிக்கும்
நுகர்வு கலாசாரம் அதிகரித்து வருகிறது.
கையில் காசில்லாத நாம்
எதற்கு கடன்வாங்கி பொருள்களை வாங்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தில் உள்ள சீனா, ஜப்பான்
நாடுகளில் கடன் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பணம் என்பது
அச்சடிக்கப்பட்ட சுதந்திரம் என்றார் மேல்நாட்டு அறிஞர். ஆனால் அது
உண்மையல்ல. பணம் வைத்திருப்பவர்கள் சுதந்திரத்தை இழந்து வருகிறார்கள்
என்பதே உண்மை. பணக்காரர்கள் வங்கிக் கணக்குப் புத்தகங்களில் மட்டுமே
பணத்தைப் பார்க்கிறார்கள்.
எளிமையான வாழ்க்கைக்கு
தயார்படுத்துங்கள்: நுகர்வுக் கலாசாரம் வேகமாக வளர்வதற்கு காரணமே
பேராசைதான். பொருள்களை வாங்கிக் குவிப்பது என்பதே ஒருவிதமான போதைதான்.
எனவே, குழந்தைகளை எதற்கும் ஆசைப்படாமல் வளர்க்க வேண்டும். எளிமையான
வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு
ஆட்படாமல் பாதுகாக்க வேண்டும்.
சிறுதானியங்களை உட்கொள்ள
பழக்கப்படுத்த வேண்டும். பயனுள்ள வாழ்க்கை முறைகளை கற்றுத் தரவேண்டும்.
அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
சுற்றுச்சூழலுக்குப் பங்கம் விளைவிக்காத பழக்கங்களைக் கற்றுக்கொள்ள
வேண்டும். இதனை பெற்றோர்கள் ஒரு கடமையாகச் செய்ய வேண்டும். பிறகு அவர்களை
யாரும் ஏமாற்ற முடியாது. இதுவே நுகர்வோர் கலாசாரத்திலிருந்து நம்
சந்ததிகளைக்
காப்பாற்ற நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும் என்றார் இறையன்பு.
news tmb email thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக