சென்னை, மார்ச்.18-
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக கடந்த 8 நாட்களாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்கு பூட்டு போட முயன்ற நாம் தமிழர் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம், சாலை மறியல் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை 9 மணி அளவிலேயே சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் தாலுகா அலுவலகம் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் ஒன்றில் மாணவர்கள் திரள தொடங்கினார்கள். சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவி திவ்யா இந்த மாணவர்களை ஒருங்கிணைத்திருந்தார்.
ஈழப்படுகொலை காட்சிகள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் பிடித்திருந்தனர். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், தமிழகத்தில் இருந்து இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும். பன்னாட்டு போர்க் குற்ற விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என்பது போன்ற கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள்.
மேலும் இலங்கை அரசுக்கு துணை போகும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இலங்கை, இந்தியாவுக்கு நட்பு நாடென்றால் இந்தியா எங்களுக்கு எதிரி நாடு என்கிற கோஷங்களையும், கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்கிற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் சுமார் 2 1/2 மணி நேரம் நீடித்தது. சாலை ஓரமாக நடுரோட்டில் அமர்ந்த மாணவர்களிடம் அடையாறு துணை கமிஷனர் சுதாகர் 2 முறை சென்று போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் இன்னும் மாணவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். உடனடியாக போராட்டத்தை நிறுத்த முடியாது என்று கூறினர்.
பின்னர் 11.30 மணி அளவில் மாணவர்கள் அனைவரும் ஆவேசமாக கோஷம் எழுப்பியபடியே கவர்னர் மாளிகையை நோக்கி ஓடினர். இந்த போராட்டம் காரணமாக சைதாப்பேட்டை கோர்ட்டில் இருந்து கவர்னர் மாளிகை வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு போலீசார் தடுப்பு வேலிகளை சாலையில் அமைத்திருந்தனர். அவற்றை தள்ளிவிட்டு விட்டு கவர்னர் மாளிகையை நோக்கி முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் ஓடினர். அவர்களை நூற்றுக்கணக்கான போலீசார் அரணாக நின்று தடுத்தனர்.
அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களின் கூட்டத்தை கயிறு கட்டி போலீசார் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அங்கு நேராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 அரசு பஸ்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் மாணவர்கள் 500 பேரையும் கைது செய்து ஏற்றினர். அப்போது மாணவர்கள் ஆவேசமாக கோஷமிட்டபடியே தங்கள் கையில் வைத்திருந்த பதாகைகளால் போலீஸ் வேனிலும், பஸ்களிலும் ஓங்கி அடித்தனர்.
இதைத்தொடர்ந்து தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர்கள் சரவணன், சுதாகர் ஆகியோர் அங்குமிங்கும் ஓடிச்சென்று பஸ்களில் மாணவர்களை ஏற்றுவதற்குள் படாதபாடு பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முன்னதாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பஸ் ஏறுவதற்காக அங்கு வந்தார். அவரும் மாணவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ராஜபக்சேவின் உருவப்படத்தை கிழித்து எறிந்து ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போராட்டத்தின் போது அந்த பகுதியில் போக்குவரத்து எப்போதும் போலவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்கள் கைதாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் போலீசார் அந்த சாலையில் தடைகளை ஏற்படுத்தினர்.
இதற்கிடையே சைதாப்பேட்டை கோர்ட்டு வாசலிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த தடுப்பு அகற்றப்பட்டது.
மாணவர் போராட்டத்துக்கு கோர்ட்டில் இருந்த வக்கீல்கள் சிலரும் வெளியில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த போராட்டம் காரணமாக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்த தள்ளுவண்டி கடைகளும் மூடப்பட்டிருந்தன. முன்னணி தமிழ் தொலைக்காட்சிகள் மட்டுமின்றி அனைத்து வட இந்திய டி.வி.க்களும் இந்த போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன.
ஆந்திர சட்டக்கல்லூரியில் பயிலும் 30 தமிழ் மாணவர்களும் அங்கிருந்து வந்து இந்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று ராஜபக்சே பேனரை செருப்பால் அடித்து எரிக்க முயன்றனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் அவர்களை தடுத்து நிறுத்தினார்.
இந்த போராட்டத்துக்கு சித்த மருத்துவ ஆராய்ச்சி மாணவர் டாக்டர் வீரபாகு தலைமை தாங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக