Saturday, 09 February 2013 10:44

இலங்கையில் தமிழ்மக்களை இனப் படுகொலை புரிந்ததாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களினால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிறிலங்கா ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு, இந்தியாவில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும், அதனைக் கண்டுகொள்ளாது, பாதுகாப்புடன் அவரை வரவேற்று அனுப்பி வைத்திருக்கும் இதே காலப்பகுதியில், இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என எழுதப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
இந்தத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட, நிறைவேற்றப்பட்ட முறைமைககள் மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையிலும், இன்று காலை நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை மூலம், இந்திய அரசின் நீதித்துவம் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறது.
அப்சல் குரு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக் குறித்து பல்வேறு கருத்து நிலைகளும் வாதங்களும் உள்ளன. அவையெதுவும் முழுமையாக ஆராயப்படாமல், நிகழ்த்தப்பட்ட இத் தண்டனை இந்தியா நீதியின் பக்கமா..? எனும் கேள்வியினைப் பலமாக எழுப்பியிருக்கிறது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், மரணதண்டனைக்கு எதிரானவர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறது இரகசியமாக இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் இம் மரண தண்டனை. அண்மையில் சவூதியில் றிசானா என்ற இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையில், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு நியாயங்கள் எவ்வாறு மறுக்கப்பட்டனவோ, அதே போல் இந்தியாவில் அப்சல் குருவின் தரப்பு நியாயங்கள் மறுக்கப்பட்டிருப்பதை சுட்டுகின்றன ( பதிவு 1 பதிவு 2 பதிவு 3, பதிவு 4 (ஆங்கிலத்தில்)) இப் பதிவுகள்.
இவ்வாறான ஒரு குற்றச்சாட்டு, இயலாமை மிக்க எந்தவொரு மனிதனையும் தாக்கும் என்பதைப் புரிந்து கொள்ளதாவரைக்கும் இந்தப் பதிவுகளின் நியாயங்கள் உணரப்பட முடியாதவை. அவ்வாறு உணர்வற்றிருப்பதன் பலன் ஒரு காலையில் இவ்வாறான குற்றசாட்டுக்கு எவரும் பலியாகலாம் என்பதனை சுய அனுபவமாய் தெரிந்து கொள்ளும் அபாயத்தை தரவல்லது.
நாடுகள் மாறுபடலாம், ஆனால் ஆட்சியதிகாரங்களின் தன்மைகள் மாறுவதில்லை என்பதனை மீண்டும் மீண்டும் இவ்வாறான ஒத்த செயற்பாடுகள் உணர்த்துகின்றன. அதிகாரத்தின் வழி ஒன்றுபட்டு நிற்கையில் மகிந்தவை மன் மோகன் சிங் வரவேற்காமல் என்ன செய்வார். பேய்கள் ஆட்சி செய்தால்.....?
4தமிழ்மீடியாவுக்காக : நாகன்
நன்றி: வினவு,
யுவகிருஷ்ணா
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக