-
ஜனவரி 10, 2013
![](http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88.png)
நெசவு வேலை செய்து, தான் பெற்று வளர்த்த மகள்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய குப்புசாமிக்கு, அவரது மகள்கள் காட்டிய வழி சுடுகாடு. தள்ளாத வயதில் இருக்கும் குப்புசாமியை, பராமரிக்க மனமில்லாத அவரது உறவினர்கள், அவரை கொண்டு வந்து மயானத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். 5 நாட்கள் இந்த முதியவர், கொட்டும் பனியில், மயானத்தின் திறந்தவெளியில் ஆதரவற்று கிடந்தார்.
தனது இறுதி சடங்குகளுக்காக தானே சேர்த்து வைத்த ரூ.2 ஆயிரம் பணத்தையும் யாரோ பறித்துச் சென்றுவிட்டதுதான் உச்சபட்ச வேதனை. கை முறிந்துள்ள நிலையில், அதற்கு தொடர் சிகிச்சை கிடைக்காமல் துயரத்தில் தவித்துக் கொண்டிருந்த முதியவரை அந்த பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்களின் உதவியோடு மீட்டனர்.
மீட்கப்பட்ட குப்புசாமி இப்போது அன்னதானப்பட்டியில் உள்ள அரசு முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பெற்றவர்கள் தளர்ந்துவிட்டால் காப்பகத்திலோ, காட்டிலோ நிர்கதியாக தவிக்கவிடாமல் அவர்களை அரவணைப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. ஆனால், அப்படிப்பட்ட சமயத்தில் கூட காப்பாற்ற மனமில்லாமல், கைவிடும் பிள்ளைகள் இருக்கும் வரை முதியோர் காப்பகங்களில்தான் கூட்டம் அதிகரிக்கும்.
முதியவரை இடுகாட்டில் நிராதரவாக விட்டுச்சென்ற சம்பவம் நடந்த அதே சேலத்தில்தான், இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. இரண்டு முதிய பெண்மணிகளுக்கு நடந்த கொடுமையான அனுபவத்தை பதிவு செய்கிறது புதிய தலைமுறை.
தாயையும்,பாட்டியையும் சிறைவைத்த மகன், மகனுக்கு பயந்து நடுங்கும் 56 வயதான தாய் யசோதா. இவரது கணவர் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை அளித்த மருத்துவர் ராதாகிருஷ்ணன்.இவர்களின் ஒரே பிள்ளையான வெங்கட்ராமன், பெங்களூரூவில் பி.பி.எம் படிப்பு முடித்தவர். இவரால், இவரது தாய்க்கும் பாட்டிக்கும் கிடைத்தது வீட்டில் சிறைவாசம். 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தனது தந்தையை மிரட்டி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்ற வெங்கட்ராமன் எங்கு சென்றார்? தந்தை என்ன ஆனார் எதுவும் தெரியாது. அவர் விட்டுச்சென்ற தடயங்கள் தாயின் கைகளில் அவர் உண்டாக்கிய வெட்டுக் காயங்கள் மட்டுமே.
பேரனுடன் மன்றாடும் 86 வயது பாட்டி: வீட்டின் படிக்கட்டுகளை தாண்டவோ தொலைபேசியில் யாரிடமும் உரையாடவோ அனுமதிக்காமல் தினந்தோறும் துன்புறுத்திய மகனை பெற்றதற்கு தான் செய்த பாவம் என்ன? என பார்ப்பவர்களிடம் கேட்டுகொண்டிருக்கிறார் இந்த பரிதாபத்திற்குரிய தாய் யசோதா.பேரனின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதப் பட வேண்டிய பாட்டி சரோஜினி தேவிக்கோ, தன் 86 வயதில் பேரனுடன் மன்றாடுவதே பெரும் போராட்டமாக உள்ளது.
இன்று இந்த முதிய பெண்கள் அடுத்தது என்ன? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திகைத்து போய் நிற்கின்றனர்.
கோரிக்கைகள் ஏராளம் : மூத்த குடிமக்கள் வாழ்வியல் நலனுக்காக தமிழகத்தில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல திட்டங்கள் நடைமுறையிலும் இருக்கின்றன. ஆனாலும் இன்னமும் முதியோருக்கான கோரிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன.
பிறரைச் சார்ந்து வாழ்ந்தாலும், சாராமல் சுயமாக வாழ்ந்தாலும்கூட முதியோர்களுக்கு பொருளாதார உதவி என்பது மிகவும் அவசியம். அதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் முதியோர் ஓய்வூதியத் திட்டம். இந்த திட்டத்தின்படி முதியோர்களுக்கு ஓய்வூதியமாக தமிழகத்தில் மாதம்தோறும் ரூ.ஆயிரம் அளிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இந்த தொகை முதியவர்களுக்கு சரியாக சென்று சேர்வதில்லை என்கிறார்கள் தன்னார்வ அமைப்பினர்.
மேலும், ஓய்வூதியத் தொகை மட்டுமே ஒரு முதியவருக்கு போதுமானதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். காரணம், மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள் உருவாக்கப்படவேண்டும், பொது மருத்துவமனைகளில் முதியோருக்கு என தனி வார்டு அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டங்கள் சில இடங்களைத்தவிர தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெறும் அறிவிப்பு நிலையில் மட்டுமே உள்ளன. மேலும், தமிழகத்தில் லட்சக்கணக்கில் முதியவர்கள் உள்ள நிலையில், இவ்வாறு கட்டப்படும் முதியோர் இல்லங்களில் 1,500 பேரில் இருந்து இரண்டாயிரம் பேர் மட்டுமே தங்கவைக்க முடியும் என்பதால் அவை போதுமானதாக இருக்காது என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இத்தனை காரணங்கள் உள்ள நிலையில் வெறும் ஓய்வூதித்தை அளிப்பது மட்டுமே முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
அதே சமயம் முதியோருக்கான சிறப்பு உதவித் தொலைபேசி திட்டத்தின் செயல்பாடு ஓரளவு திருப்திகரமாக உள்ளதாகவும் முதியோருக்கு உதவி மேற்கொள்ளும் தன்னார்வ அமைப்பினர் தெரிவிக்கின்றனர். மேலும், அரசு கட்டடங்களிலும், பொதுக்கட்டடங்களிலும் முதியோர்களுக்கு எனத் தனியாக கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தன்னார்வ அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
முதியவர்களுக்கு சட்ட உரிமை : முதுமையில் மற்றவர் துணையை நம்பி இருக்கக்கூடியவர்களை கைவிட்டு போவது சட்டவிரோதம் என்கிறது இந்திய சட்டம். அன்பும், பாசமும் சாதிக்க முடியாமல் போகும் இடங்களில் சட்டரீதியாக சாதிக்க முயல்கிறது இந்த சட்டம்..
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 என்ற இந்த சட்டம், முதியோர்களை அவர்களின் இறுதிக்காலம் வரை கவுரமாக வாழ வழி செய்கிறது. இந்தியாவின் எந்தப்பகுதியில் வாழும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் என்றழைக்கப்படுவர். இந்தச் சட்டத்தின்படி பலன்களைப்பெற 60 வயதிற்கும் மேற்பட்ட தாய் அல்லது தந்தைக்கு உரிமை உண்டு. இவர்களை பராமரிக்கும் கடமை உள்ள குழந்தை என்ற பதம் இந்தச் சட்டத்தின்படி மகன் அல்லது மகள் மற்றும் பேரன் அல்லது பேத்தி. உறவினர் என்றால் இந்தச் சட்டத்தின்படி மூத்த குடிமக்களின் சொத்துக்களை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள். மேலும், எந்த ஒரு மூத்த பெற்றோர் தங்களால் தங்களுக்கு தேவையான வருவாயை ஈட்டமுடியாது போகிறதோ அவர்களுக்கு இந்தச் சட்டத்தின்படி பராமரிப்பை தங்கள் குழந்தைகளிடம் இருந்து பெற உரிமை படைத்தவர்கள். குழந்தைகள் அற்ற பெற்றோர், உறவினர்களிடமிருந்து பராமரிப்பு பெற உரிமை படைத்தவர்கள். இந்தச் சட்டத்தின்படி பராமரிப்பு என்பது உணவு, உடை, தங்குவதற்கு வீடு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை. மேலும், இந்தச் சட்டத்தின்படி உரிமை கோரும் பெற்றோருக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே அளிக்க தீர்ப்பாயத்தால் உத்தரவிடமுடியும். பராமரிக்கப்படவேண்டிய பெற்றோரை அவர்களது குழந்தைகளோ, உறவினரோ கைவிட்டுவிட்டாலோ, துரத்தி விட்டாலே அந்த குழந்தைகள் அல்லது உறவினருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் இந்தச்சட்டத்தில் இடமுண்டு.
puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக