மானியமாக
வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9ஆக உயர்த்திய
மத்திய அரசை மனிதநேய மக்கள் கட்சி மனமாரப் பாராட்டுகிறது. இந்த அறிவிப்பு ஏழை
மற்றும் நடுத்தர மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த
செப்டம்பர் மாதம், மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை 6ஆக குறைத்தும், செப்டம்பர் 2012
முதல் மார்ச் 2013 வரையிலான எண்ணிக்கையை 3ஆக குறைத்தும் மத்திய அரசு எடுத்த முடிவு
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனக் கூறி மக்கள் நல
விரும்பிகள் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக
இருந்தது. கடந்த மாதம் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்
பிரச்சாரத்தின் போது மக்களின் துன்பங்களையும், எதிர்ப்புகளையும் நேரடியாக அறிந்து
கொண்டது.
இப்போது
மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9 ஆகவும், செப்டம்பர் 2012 முதல்
மார்ச் 2013 வரையிலான எண்ணிக்கையை 3ல் இருந்து 5 ஆகவும் உயர்த்தி பிராயச்சித்தம்
தேடியுள்ளது. தாமதமான முடிவு என்றாலும் இது வரவேற்கத்தக்கது.
அதேசமயம்,
பெட்ரோலைப் போலவே டீசல் விலையை நிர்ணயிக்கும் முடிவை எண்ணெய் நிறுவனங்களே
எடுக்கலாம் என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. டீசல் விலை
உயர்ந்தால் நாட்டில் அனைத்து உபயோகப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்
என்பதைக் கருத்தில் கொண்டு இம்முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய
மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக