: 10 May 2013
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இம்மாதம் 6 ஆம் தேதி இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்துக்கு காரணமான சாலையின் குறுக்கே ஓடிய மாட்டின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளையில் இம்மாதம் 6 ஆம் தேதி இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் ராமேசுவரத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப்பேருந்தின் டிரைவர் கார்த்தீசன்(40) பட்டுக்கோட்டையை சேர்ந்த பயணி கணேசன்(51) இவரது மனைவி வாசுகி(48) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்தில் இரு அரசுப் பேருந்துகளையும் சேர்ந்த 20 பேர் காயம் அடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சாலை விபத்துக்கு காரணமான சாலையின் குறுக்கே ஓடிய மாட்டின் உரிமையாளரான மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த சின்னையா(65) என்பவர் மீது மாடுகளை முறையாக பராமரிக்காதது, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் மாடுகளை சாலைகளில் திரிய விட்டது உள்ளிட்ட பிரிவுகளில் மண்டபம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் கூறியது:
மண்டபம் அருகே வேதாளையில் ஏற்பட்ட சாலை விபத்துக்கு காரணம் மாடு என விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து அம்மாட்டின் உரிமையாளரான சின்னையா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலைகளில் தங்களது கால்நடைகளை கட்டுப்பாடில்லாமல் இடையூறு ஏற்படுத்தும் வகையில் விட்டு விட்டு அதன் காரணமாக நிகழும் சாலை விபத்துக்களுக்கு சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களே பொறுப்பாவார்கள். இதை மீறுவோர் மீது அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக