08 April 2013 04:02 AM IST
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி, மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க இருப்பதாகவும், ஏப்.12ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் மறியல் செய்ய போவதாகவும் ராமேசுவரம் மீனவர் சங்கம் அறிவித்துள்ளது
.
ராமேசுவரத்தில் இருந்து மீன்வளத் துறை அனுமதி பெற்று 533 படகுகள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றன. இவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் 5 படகுகளில்
இருந்த 30 மீனவர்களை எல்லைத் தாண்டியதாக கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காவல் துறையினர் 30 மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோணிப்பிள்ளை சூட்சம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவர்களை ஏப்.18 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ராமேசுவரம் மீன்வளத் துறையினர் நடத்திய விசாரணையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான படகு, பாம்பன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்களான மார்ட்டின், ஆரோக்கிய குரூஸ், புவனேந்திரன், அந்தோணி அடிமை ஆகியோரின் படகுகளில் இருந்த 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், 5 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீன்வளத் துறையில்
மீன்பிடி அனுமதி வழங்கும் வளாகத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்குவதும் என்றும், ஏப்.12ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் மறியல் செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள மீனவர்களை சந்தித்து ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது எனவும் முடிவு செய்தனர்.
ஏற்கெனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 மீனவர்களையும்,போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி மார்ச் 16 ஆம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர். மேலும், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இருப்பினும், பொருளாதார நிலையைக் கருதி 16 நாள்களுக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டு மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
dinamani. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக