ஈழ பிரச்சினையில்
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் போக்கினைத் தொடர்ந்து மௌனமாகப் பார்த்துக்
கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் டெசோ தன்
நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்றும் அந்த அமைப்பு
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
7-3-2013 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற டெசோ
கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் எழுதி வருகின்றன. நாம்
முன்வைத்த எந்தக் கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும்
ஏற்படவில்லை.
நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு
அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக்
கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன.
இவர்கள் அனைவரும் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு
மாதம் 12ஆம் நாள் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி கருத்தரங்கில் சர்வதேச பொதுமன்னிப்பு அவையின்
இந்தியச் சார்பாளர், அனந்த பத்மநாபன் கலந்து கொண்டார்.
கூடுதலாக மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ்
கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார்.
உண்மை இவ்வாறிருக்க, டெசோ கருத்தரங்கத்திற்குப்
பின்னடைவு என்பது எவ்விதத்தில் பொருந்தும்? எனினும், காங்கிரஸ் கட்சியும் இந்திய
அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப்பிரச்சினையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து
வருவது கவலை தருவதாக உள்ளது.
7-3-2013 அன்று மக்களவையில் மத்திய வெளியுறவுத்
துறை அமைச்சர், ஐ.நா. அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து
உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை.
இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம்
அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, அதிமுக, பா.ஜ.க. ஆகிய கட்சிகள்
வெளிநடப்பு செய்தன.
ஆனால், அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து
கொண்ட இந்திய தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத், அமெரிக்க
தீர்மானத்தை ஆதரிப்போம் என்பதாக உரையாற்றினார்.
ஆனால், 8-3-2013 அன்று மாநிலங்களவையில்
குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவித்து உரையாற்றிய, இந்தியப் பிரதமர் மன்மோகன்
சிங் எந்த உறுதியும் வழங்காமல், தமிழ்ஈழத் தலைவர்களோடு இலங்கை அரசு பேச்சுவார்த்தை
நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின்
இப்போக்கினைத் தொடர்ந்து மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக்
கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது
என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம்.
எனவே, இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது
வேலைநிறுத்தம் வருகிற 12ம் நாள் நடைபெற்றே தீரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்வேலை நிறுத்தத்திற்கு ஒட்டுமொத்தத்
தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அன்போடு வேண்டிக்கேட்டுக்
கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
thedipaar thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக