டாக்கா:போர்க்குற்றம் சாட்டி ஜமாஅத்தே இஸ்லாமியின்
உறுப்பினர்கள் மீது குற்ற விசாரணையை தொடரும் பங்களாதேசில் சர்ச்சைக்குரிய
தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்கு எதிராக வன்முறைக் கலந்த போராட்டம் தொடருகிறது.
மோதல்களில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
1971-ஆம் ஆண்டைய போரில் பாகிஸ்தானுக்கு உதவினார்கள்
என்ற வழக்கில் ஜமாஅத்தே இஸ்லாமி துணைத் தலைவர் தில்வார் ஹுஸைன் ஸஈதிக்கு
வியாழக்கிழமை தீர்ப்பாயம் மரணத் தண்டனை விதித்ததன் காரணமாக பங்களாதேஷில்
ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் போராட்டம் தீவிரம் அடைந்தது.நேற்று ஜும்ஆவையொட்டி
நாட்டின் மஸ்ஜிதுகளில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
15 மாவட்டங்களில் மோதல் தீவிரமடைந்துள்ளதாக
எ.எஃப்.பி கூறுகிறது. ஐந்து பாதுகாப்பு படையினரும், ஒரு
போலீஸ்காரரும் பலியானவர்களில் அடங்குவர். நூற்றுக்கணக்கான
நபர்களுக்கு காயமேற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர்
பலியாகினர். பெரும்பாலான இடங்களில் ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்களுக்கும்,
போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. பங்களாதேஷின் மிகப்பெரிய கட்சியான
ஜமாஅத்தே இஸ்லாமி நேற்று ஜும்ஆவுக்குப் பிறகு போராட்டத்திற்கு
அழைப்பு விடுத்திருந்தது.
தலைநகரான டாக்கா உள்ளிட்ட நகரங்களில் பிரதமர்
ஷேக் ஹஸீனாவின் ஆதரவாளர்களுக்கும், ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்களுக்கும் இடையே
மோதல் நிகழ்ந்தது.ஜமாஅத் இஸ்லாமியின் உறுப்பினர்களுக்கு போட்டியாக அரசு ஆதரவாளர்கள்
போராட்டத்திற்கு களமிறங்கியது நிலைமையை சீர்குலைத்தது.
போர்க் குற்றம் சாட்டப்பட்டோருக்கு உச்சபட்ச
தண்டனையை வழங்கவேண்டும் என்று கோரி அரசு ஆதரவாளர்கள் போராட்டங்கள்
நடத்தினர். நீதிமன்றத்தீர்ப்பினை எதிர்த்து போராட்டம் நடத்திய
உறுப்பினர்களை போலீசும், அரசு ஆதரவாளர்களும் இணைந்து தாக்கியதாக ஜமாஅத்தே
இஸ்லாமி குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு
காரணமான 1971-ஆம் ஆண்டு போர் தொடர்பான வழக்குகளின் விசாரணையை ஷேக் ஹஸீனா தலைமையிலான
அரசு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தி நடத்தி வந்தது. இத்தீர்ப்பாயத்தின் 3-வது தீர்ப்பு
வியாழக்கிழமை வெளியானது. ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் காதர் முல்லா,
இன்னொரு தலைவரான மவ்லானா அப்துல் கலாம் ஆஸாத் ஆகியோருக்கு அவர்கள் இல்லாமலேயே கடந்த
மாதம் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இதைப் போன்றதொரு குற்றம் சாட்டப்பட்டு
ஜமாஅத்தின் 7 தலைவர்கள் விசாரணையை சந்தித்து வருகின்றனர்.
ஜமாஅத் மற்றும் பங்களாதேஷ் தேசிய கட்சியின் முக்கிய
தலைவர்கள் இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணைச் செய்ய
2010-ஆம் ஆண்டு உருவாக்கிய தீர்ப்பாயத்தை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள்
அங்கீகரிக்கவில்லை.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக