ஜெய்பூரில் அகில
இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில் அக்கட்சியின் துணைத் தலைவராக
ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன்னை துணைத் தலைவராக
தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று ராகுல் காந்தி
பேசியதாவது:-
நான் காங்கிரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு
நீங்கள் அனைவரும் நேற்று வாழ்த்து தெரிவித்தீர்கள். ஆனால், நேற்றிரவு என் அறைக்கு
வந்த என் அம்மா, என் அருகில் அமர்ந்து அழுதார்கள். ஏனெனில், அனைவராலும்
விரும்பப்படும் அதிகாரம் என்பது விஷம் போல ஆபத்தானது என்பது அவர்களுக்கு
புரியும்.
என்னோடு நண்பர்களைப் போல 'பேட்மிண்டன்' விளையாடிய பாதுகாவலர்களே,
என் பாட்டியை 1984ம் ஆண்டு சுட்டுக்கொன்றனர். அப்போது என் அப்பா (ராஜீவ் காந்தி)
வெளியூரில் இருந்தார். செய்தியை கேள்விப்பட்டு வந்த அவர், தனது தாயின் பிரேதத்தை
பார்த்து கதறி அழுதார். என் வாழ்வில் முதல் முறையாக அவர் அழுததை நான் அப்போதுதான்
பார்த்தேன்.
நான் பார்த்ததிலேயே மிக வீரமான நபராக இருந்தாலும், தனது தாயின்
இழப்பை தாங்கமுடியாமல் அவர் அழுதார். அந்நாட்களில் நமது நாடு இன்றுள்ள நிலையில்
இல்லை. எனது பாட்டியின் மரணத்தால் என் அப்பா மனம் நொறுங்கிப் போனாலும்,
தன்னம்பிக்கையுடன் இந்த நாட்டு மக்களுக்காக அவர் உழைத்தார்.
உலகத்தின் கண்
முன்னர், நாம் ஏதுமற்றவர்களாக இருந்தோம். நம்மை பற்றி யாரும் நினைக்கவில்லை. என்
பாட்டி கொல்லப்பட்ட அன்று மாலை என் அப்பா நாட்டு மக்களிடம் டி.வி.யில் தோன்றி
பேசினார். என்னைப் போலவே அவரும் மனம் நொறுங்கிப்போய் இருந்தார் என்பது எனக்கு
தெரியும். அவருக்கு முன்னே என்ன உள்ளது என்பதை என்னைப் போலவே அவரும்
அறிந்திருந்தார் என்பதும் எனக்கு தெரியும்.
அவரது பேச்சு, இருண்ட வானில்
ஒளிக்கீற்றாக அமைந்திருந்தது. மறுநாள் அதே ஒளியை இந்திய மக்களும் கண்டார்கள் என்பதை
நான் உணர்ந்தேன். 8 ஆண்டு கால அரசியல் அனுபவத்துடன் 42 வயதாகும் நான், இன்றைய
இந்தியாவின் வளர்ச்சிக்கு அன்றைய நம்பிக்கை ஒளிக்கீற்று தான் காரணம் என்பதை
உணர்கின்றேன்.
அதிகாரத்தை நாம் விரட்டிக்கொண்டு போகக்கூடாது. நமது
அதிகாரத்தை மற்றவர்களுக்கும் அதிகாரம் வழங்க பயன்படுத்த வேண்டும். அதிகாரம் என்பதை
என் அம்மா விஷமாக தான் பார்க்கின்றார். அவர் அதிகாரத்தை விரும்பவில்லை. விஷம்
என்பது என்ன? என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதை பருகிப் பார்க்கக்
கூடாது.
எனக்கு பின்னால் இவ்வளவு மக்கள் இருக்கும்போது, என் முன்னே
மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்பதையும் நான் உணர்கின்றேன். நம்மிடம் திட்டங்கள்
இருக்கலாம்; எண்ணங்கள் இருக்கலாம்; ஆனால், தன்னம்பிக்கை இல்லையென்றால், எந்த
மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது.
காங்கிரஸ் கட்சி என்பது
தன்னம்பிக்கையின் அடையாளமாகும். காங்கிரஸ் கட்சியும், இந்திய மக்களும் இப்போது என்
வாழ்க்கை. கட்சிக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் என்னிடம் உள்ள அனைத்து
சக்தியையும் திரட்டி நான் போராடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
as
thedipaar thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக